
இந்திய தொழில்நுட்பக் கழகம் மண்டி, எதிர்காலத் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு மூன்று புதிய இளங்கலை படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் முதன்முறையாக ‘குவாண்டம் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்’ என்ற பிரத்யேக பி.டெக் படிப்பை வழங்கும் முதல் கல்வி நிறுவனம் என்ற பெருமையை ஐஐடி மண்டி பெற்றுள்ளது.
இதனுடன் டேட்டா அனலிட்டிக்ஸ் தொழில்நுட்பத்தை இணைத்து மேலும் இரண்டு புதிய படிப்புகளையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய படிப்புகள் 2026-27 கல்வியாண்டு முதல் பயன்பாட்டுக்கு வருகின்றன.
பொறியியல் தொழில்நுட்ப இளங்கலைப் பட்டம் - குவாண்டம் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்:
இது இந்தியாவின் முதல் பிரத்யேக குவாண்டம் தொழில்நுட்ப இளங்கலை பட்டப்படிப்பாகும்.
பாடத்திட்டம்:
குவாண்டம் கம்ப்யூட்டிங், குவாண்டம் கம்யூனிகேஷன், சென்சார்கள், செயற்கை நுண்ணறிவு, கணினி அறிவியல் மற்றும் மேம்பட்ட கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இதன் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாய்ப்புகள்:
பாதுகாப்பான தகவல் தொடர்பு, மேம்பட்ட கணிப்பொறி அமைப்புகள் மற்றும் குவாண்டம் ஹார்டுவேர் போன்ற எதிர்காலத் தொழில்நுட்பத் துறைகளில் இந்தப் படிப்பு மிகப்பெரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
மொத்த இடங்கள்:
முதற்கட்டமாக இந்தத் துறையில் 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐஐடி மண்டியில் உள்ள ‘குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்’ இதனை நிர்வகிக்கிறது.
பொறியியல் தொழில்நுட்ப இளங்கலைப் பட்டம் - வேளாண் பொறியியல் மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ்:
விவசாயத் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தும் நோக்கில் இந்தப் படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
பாரம்பரிய வேளாண் பொறியியல் முறைகளுடன் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் , ரிமோட் சென்சிங் மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இதில் கற்பிக்கப்படும்.
பயன்கள்:
ஸ்மார்ட் நீர்ப்பாசன அமைப்புகள், பயிர்களைக் கண்காணிக்கும் ட்ரோன்கள் மற்றும் மகசூலை அதிகரிக்கும் நவீன மாதிரிகள் போன்றவற்றை உருவாக்க மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
பொறியியல் தொழில்நுட்ப இளங்கலைப் பட்டம் - வேதியியல் பொறியியல் மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ்:
ஐஐடி மண்டியின் வேதியியல் அறிவியல் பள்ளியின் கீழ் இந்தப் புதிய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
வேதியியல் பொறியியலின் அடிப்படை அம்சங்களுடன் கம்ப்யூட்டேஷனல் மாடலிங், மெஷின் லேர்னிங் மற்றும் டேட்டா சயின்ஸ் ஆகிய தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
பயன்கள்:
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வேதியியல் செயல்முறைகளை மேம்படுத்துதல், துல்லியமான உற்பத்திக் கட்டமைப்பு போன்றவற்றை மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
மாணவர்களுக்கான எதிர்காலப் பயன்கள்:
இந்த மூன்று படிப்புகளுமே பொறியியல் அடிப்படைகளுடன் செயற்கை நுண்ணறிவு, டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் நவீன ஆராய்ச்சிகளை ஒருங்கிணைத்து வழங்கப்படுகின்றன.
மாணவர்கள் தத்துவார்த்த அறிவை மட்டுமின்றி, ஆய்வகப் பயிற்சிகள், இன்டர்ன்ஷிப்கள் மற்றும் அக்ரி-டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடனான களப்பயிற்சி மூலமாகச் செயல்முறை அறிவையும் பெறுவார்கள்
குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை உலகை ஆளப்போகும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் என்பதால், ஐஐடி மண்டியின் இந்த முன்னெடுப்பு இந்திய மாணவர்களை உலகளாவிய தொழில்நுட்பப் போட்டிகளுக்குத் தயார்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.